சமஸ் கட்டுரைக்கு ஓர் எதிர்வினை
“என்ன பேச வேண்டும் என் பிரதமர்” என்றொரு கட்டுரையை ‘இந்து தமிழ் திசை’ நாளேட்டில் (ஏப்.28) எழுதியிருக்கிறார் நண்பர் சமஸ். கடைசி வரையில் பிரதமர் என்ன பேச வேண்டும் என்றோ, என்ன செய்ய வேண்டும் என்றோ அந்தக் கட்டுரை பேசவில்லை! ஒருவேளை பிரதமர் கட்டுரையில் உள்ள கருத்துகளை உள்வாங்கிக்கொண்டு குழந்தைகளை வானொலி முன் அமர வைத்து நடத்துகிற மன் கீ பாத் நிகழ்ச்சிகளிலோ, மக்களைத் தொலைக்காட்சி முன் அமர வைத்து நிகழ்த்துகிற உரைகளிலோ பேச வேண்டும் என்ற உள்ளக்கிடக்கையைக் கட்டுரையின் தலைப்பு வெளிப்படுத்துகிறதோ என்னவோ! எதிர்க்கட்சித் தலைவர்களின் கடிதங்களுக்கே பதிலளிக்க விரும்பாத பிரதமர் இந்தக் கட்டுரைக்கு என்ன எதிர்வினையாற்றுவார் என்று சமஸ் எதிர்பார்க்கிறார்?
“சீனா இந்தக் கிருமியை முதலில் எதிர்கொண்டது; ஆகையால், அடுத்ததாக ஐரோப்பா, அமெரிக்கா, தொடர்ந்து ஆசியா, ஆப்பிரிக்காவின் ஏனைய நாடுகள் என்று எல்லோருமே மூடுண்ட சீன அணுகுமுறையையே பின்பற்றலானோம்; முழு ஊரடங்குக்கு மாறினோம்,” என்று தொடர்கிறார். ‘மூடுண்ட` சீனாவில் ஏற்பட்ட கொரோனா பாதிப்புகள் முதல், சீன அரசு அதைக் கையாண்ட விதம் வரையில் உலகத்திற்கு ‘பகிரங்கமாக’ தெரியவந்தது எப்படி? அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தனது சொதப்பலான நடவடிக்கைகளால் செல்வாக்கை இழந்து வரும் நிலையில், சீனாதான் திட்டமிட்ட முறையில் கிருமி யைப் பரப்பியது என்ற எண்ணத்தை ஏற்படுத்தும் நோக்க த்துடன் நாள்தோறும் அவர் அறிக்கை விடுகிறார். அதை இங்கே பல ஜெராக்ஸ் மெசின்கள் நகலெடுக்கின்றன.
சமஸ் அப்படி நேரடியாகப் பழிசொல்லவில்லைதான். நல்லது. ஆனால், சீன அணுகுமுறையையே எல்லா நாடு களும் பின்பற்றியதாகவும், முழு ஊரடங்குக்கு மாறிய தாகவும் சொல்கிறாரே, அது சரிதானா? ஊரடங்கு என்ற ஒன்றைத் தவிர சீனா கையாண்ட வேறு வழிமுறைகளில் எதையெல்லாம் இந்தியாவும் ஏனைய நாடுகளும் பின்பற்றின?
முளைத்த மருத்துவமனைகள்
எடுத்துக்காட்டாக, கொரோனாவின் தீவிரத்தைக் கண்டறிந்ததும் அதன் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரு வழிமுறையாக ஊரடங்கை அறிவித்த சீனா, அத்து டன் புதிய மருத்துவமனைகளைக் கட்டியதே! மற்ற கட்டடங்களைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு மருத்துவமனை கள் கட்டுவதற்கு உயர் முன்னுரிமை அளிக்கப்பட்டதால் இரண்டொரு வாரங்களில் அந்த மருத்துவமனைகள் சிகிச்சைக்குத் தயாராய் எழுந்து நின்றன. பாதிப்பு தீவிர மாக இருந்த வுஹான் மாவட்டத்தில் மட்டுமே, கட்டாந்தரை யாக இருந்த மனைகளில் இரண்டு புதிய மருத்துவமனை கள், 2,600 படுக்கைகளுடன், கட்டட வல்லுநர்களாலும் கட்டுமானத் தொழிலாளர்களாலும் உருவாக்கப்பட்டன.
இத்தகைய புதிய மருத்துவமனைகள் கோவிட்-19 சிகிச்சைக்கும், நோயாளிகள் பராமரிப்புக்கும் என்றே சிறப்பு வசதிகளுடன் எழுப்பப்பட்டவை. தொடக்கத்தில் மட்டுமே வழக்கமான மருத்துவமனைகள் பயன்படுத்தப்பட்டன, பின்னர் புதிய சிறப்பு மருத்துவமனைகளுக்கு கொரோனா சிகிச்சை மாற்றப்பட்டது. இதனால் கொரோனா தொற்று ஏற்பட்டவர்களுக்குக் கூடுதல் கவனத்துடன் மருத்துவம் வழங்கப்பட்டது, வழக்கமான மருத்துவமனைகளின் வழக்கமான நோயாளிகளுக்குப் பாதிப்போ பயமோ ஏற்படுவது தடுக்கப்பட்டது.
‘மூடப்படாத’ தேசங்களில், ஏற்கெனவே இருக்கிற மருத்துவமனைகளில்தான் தனிப் பிரிவுகள் ஏற்படுத்தப் பட்டிருக்கின்றன. அதில் தன்னலமற்று மருத்துவர்களும் செவிலியர்களும் உதவியாளர்களும் தன்னார்வலர் களும் பணியாற்றி வருகிறார்கள். தங்களுக்குரிய பாது காப்பு உடைகளும் கருவிகளும் போதுமான அளவுக்கு வழங்கப்படவில்லை என்று அவர்கள் நொந்துபோயிருக் கிறார்கள். தனியார் மருத்துவமனைகளை இந்தக் காலக்கட்டத்தில் மட்டுமாவது அரசின் கட்டுப்பட்டிற்குள் கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கையை நமது மத்திய அரசு காதில் போட்டுக்கொள்ளவே இல்லையே? சில கல்லூரி நிர்வாகங்கள், சில தனி மனிதர்கள் தங்களுடைய கட்டடங்களை சிகிச்சைக்கும் தனிமைப் படுத்தலுக்கும் பயன்படுத்திக்கொள்ளலாம் என தாங்களாக முன்வந்து அறிவித்திருக்கிறார்கள். அரசு அதை ஒரு இடைக்கால ஏற்பாடாகவே ஆணையிட்டுச் செய்யலாமே?
பிரதமருடன் கட்டுரையாளர் சமஸ் பேசியிருக்க வேண்டிய மற்றொரு முக்கியமான பிரச்சினை, ஊரடங்குக் கால ஊதியம். இது குறித்துக் கருத்துக் கூறிய ஒரு சமூகவியலாளர், உணவாக வழங்குவதை விடவும், ஊரடங்குக்காலத்தில் முழு ஊதியம் கொடுப்பதே மக்களின் சுயமரியாதையையும் பாதுகாக்கிற செயலாக இருக்கும் என்றார். தனியார் நிறுவனங்களுக்கு இது தொடர்பாகத் திட்டவட்டமான ஆணை பிறப்பிக்கப்பட்டிருக்கிறதா? சீனா வில் வீட்டோடு முடங்கியிருக்கிற அத்தனை தொழிலாளர் களுக்கும் முழு ஊதியம் வழங்கப்பட்டாக வேண்டும் என்று அனைத்து நிறுவனங்களுக்கும் ஆணையிடப் பட்டிருக்கிறது.
பரிசோதனைப் பணிகள்
தொற்று இருப்பவர்களையும், அவர்களோடு தொடர்பில் இருந்தவர்களையும் கண்டறியும் பணியை உடனடியாக முடுக்கிவிட்டது சீனா. பன்னாட்டு ஊடக வியலாளர்கள் பலரும் இதைப் பதிவு செய்திருக்கிறார்கள். உதாரணமாக, ‘மதர் ஜோன்ஸ்’ என்ற வணிகநோக்கமற்ற ஊடக அமைப்பின் மூத்த ஆசிரியர் கீரா பட்லர் தனது கட்டு ரையில், வுஹான் மாவட்டத்தில் மட்டுமே 1,800 பரிசோத னைக் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டன என்று தெரிவிக்கிறார். தனிமைக் கண்காணிப்பில் வைத்திருப்பது முதல், பரி சோதனைக் கருவிகளும் மருத்துவர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளும் கிடைக்கச் செய்வது வரையில் சீன அரசு எந்த முயற்சியையும் விட்டுக்கவில்லை. வாரத்திற்கு 16 லட்சம் பரிசோதனைக் கருவிகள் தயாரிக்கப்பட்டு தேவை யான பகுதிகளுக்கு உடனுக்குடன் விநியோகிக்கப்பட்டன. இத்தகைய ஒருங்கிணைந்த நடவடிக்கைகளால், தொற்று கண்டுபிடிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு நாளுக்கு சராசரியாக 3,000 என்று இருந்த நிலைமை, 329 என்ற அளவுக்குச் சுருங்கியது என்கிறார் கீரா பட்லர்.
உலக சுகாதார நிறுவனம் சீனாவுக்கு முன்னணி சுகா தார வல்லுநர்கள் கொண்ட 2 ஆய்வுக் குழுக்களை அனுப்பி யது. அந்தக் குழுக்கள் பல்வேறு கோணங்களில் விசார ணை நடத்தின. அவர்கள் அளித்த இறுதியறிக்கை யில் கூறப்பட்டுள்ள விவரங்கள் எதுவும் மூடப்பட்டிருக்க வில்லை, பொதுத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன என்றும் அவர் கூறுகிறார். சீனாவில் புலம்பெயர் தொழிலாளர்கள் கால்நடையாகச் சொந்த ஊருக்குப் போக முயன்றதாக வோ, அவர்களில் சிலர் வீட்டை நெருங்குகிறபோது உயிரிழ ந்ததாகவோ, பட்டினியால் மரணம் ஏற்பட்டதாகவோ. சீன எதிர்ப்பைப் பரப்புவதில் மும்முரமாக இருக்கும் ஊட கங்களில் கூட செய்தி வரவில்லையே?
இரண்டு வீடியோக்கள்
இப்படிச் சொல்லிக்கொண்டுபோனால், ‘கம்யூனிஸ்ட்டு களின் சீன பக்தி’ என்று கூசாமல் கொச்சைப்படுத்து வார்களே தவிர, இந்த வாதங்கள் நியாயமா இல்லையா என்று பேச மாட்டார்கள். ஆகவே அதை இத்தோடு விட்டு விட்டு, கட்டுரையாளர் சமஸ் கூறியுள்ள வேறு சில விசயங் களைப் பார்ப்போம். “ஊரடங்கு என்பது போர் அறிவிப்பைப் போன்றதுதான்; போரே அதுவல்ல. அதாவது, சற்றும் எண்ணிப்பார்த்திடாத ஒரு கொள்ளைநோயை எதிர்கொள்வதற்கு அரசும் சமூகமும் தயாராவதற்கான அவகாசமாகவே இந்த ஊரடங்கை நாம் கருதிட வேண்டும்,” என்று அவர் கூறியிருப்பது ஏற்கத்தக்கதுதான். ஊரடங்கு விலக்கப்படும்போது மக்கள் எப்படிப் பேருந்துகளுக்கும் மற்ற பொது இடங்களுக்கும் செல்வார்கள் என்பது பற்றிய சிந்தனையும் மறுக்க முடியாததே. ஆனால், இது பற்றிய விழிப்புணர்வும் கல்வியும் வழங்க வேண்டியது அரசின் தலையாய பணியல்லவா? மாறாக அச்சமும் பதற்றமுமல்லவா ஏற்படுத்தப்படுகிறது?
தமிழகத்தில் எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் ஒப்பீட்டளவில் குறிப்பிடத்தக்கவைதான். ஆனால், ஏப்ரல் 26 முதல் நான்கு நாட்கள் முழு ஊரடங்கு என்றும், மீறினால் கடும் நடவடிக்கை என்றும் அறிவித்து முதல் நாள் மட்டுமாவது கடைகளைக் கூடுதல் நேரம் திறந்திருக்க அனுமதிக்காமல், மக்களைப் பதற்றத்தோடும் கைகளில் பைகளோடும் தெருவுக்குக் கூட்டம் கூட்டமாக வரவைத்தது பற்றிப் பிரதமர் பேசாவிட்டாலும், கட்டுரையாளர் பேசி யிருக்க வேண்டுமல்லவா?
தமிழகக் காவல்துறையினர் வெளியிட்ட ஒரு வீடியோவில், தடையை மீறி இரு சக்கர வண்டிகளில் வந்தவர்கள் வழிமறிக்கப்பட்டு, வாகனத்தில் ஒரு கோரோனா நோயாளி இருப்பதாகக் கூறி. அவரோடு இவர்களையும் அடைத்துவைக்கிறார்கள். இவர்கள் பீதியால் அலறுகிறார்கள். கேரளக் காவல்துறையினர் வெளியிட்ட ஒரு வீடியோவில், பொறுப்பின்றி வெளியே வருகிற ஒருவரின் முன்பாக கொரோனா ஒப்பனையோடு ஒருவர் வந்து நிற்கிறார். இவர் திகைப்படைய, அந்தக் கொரோனாவின் பின்னால் ஒரு மருத்துவரும் சமூகத் தொண்டரும் தோன்றி இப்படிச் செய்யலாமா என்று கேட்டு, பாதுகாப்பாக இருப்பது பற்றி அறிவுறுத்துகிறார்கள். அணுகுமுறை மாற்றம் இப்படியாகத் தொடங்கலாமே?
ச்கனடா, தென்கொரியா, ஸ்பெயின் போன்ற நாடு களிலும் கொரோனா ஊரடங்குக்கால முழு ஊதியம் வழங்க ஆணை, தனியார் மருத்துவமனைகள் அரசின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது போன்ற நடவடிக்கை கள் எடுக்கப்பட்டிருக்கின்றன. ஜெர்மனி, தைவான், ஐஸ்லாந்து, நியூஜிலாந்து, பின்லாந்து, நார்வே, டென்மார்க் ஆகிய நாடுகளின் அரசாங்கங்கள் எத்தகைய வழிமுறைகளைக் கையாண்டன என்று ‘ஃபோர்ப்ஸ்’ பத்திரிகையில் ‘20-ஃபர்ஸ்ட்’ அமைப்பின் நிர்வாகத் தலைவர் ஆவீவா விட்டன்பெர்க் கோக்ஸ் எழுதிய கட்டுரை சுட்டிக்காட்டுகிறது.
இந்திய வழிமுறையைக் கண்டறிவோம் என்று சமஸ் கூறியிருப்பது வரவேற்கத்தக்கதே. அந்த வழிமுறை உலக த்திற்கே பயன்படுமானால் பெருமைக்குரியதே. ஆனால், கொரோனா உலகம் முழுவதும் அச்சுறுத்துகிற கொடிய கிருமியாக இருக்கிறபோது, அதை வீழ்த்துவதற்கான உலகப் போரில் மட்டும் எப்படி தனியொரு நாட்டின் அணுகு முறையை வகுப்பது? உலகளாவிய ஒற்றுமையும் ஒத்து ழைப்பும் மிகமிகத் தேவைப்படுகிற காலமல்லவா இது?
காசநோய் மரணங்கள் உள்ளிட்ட நிலைமை களுக்கிடையே உலகம் வாழ்வது போலவே கொரோனா வோடும் வாழப் பழகிக்கொள்ள வேண்டியதுதான் என்கிற தொனி கட்டுரையின் பிற்பகுதியில் வருகிறது. சர்க்கரை பாதிப்பு உள்ளவர்களிடம் மருத்துவர்கள், இதைக் குணப்படுத்த முடியாது, இதனோடு இனிமையாக வாழப் பழகிக்கொள்ள வேண்டும் என்பார்கள். அது போலவா இது? பல கொடிய தொற்றுகள் தாக்கிய நிலையில் உலகம் தாக்குப் பிடித்துக்கொண்டதற்குக் காரணம் அவற்றோடு வாழப்பழகிக்கொண்டதல்ல, மருந்துகளும் சிகிச்சைகளும் கண்டுபிடிக்கப்பட்டு மேம்பட்டதால்தான். இனியும் கிருமி கள் தாக்கலாம், அறிவியல் ஆராய்ச்சிகள் தொடரும், உலகத்தைக் காக்கும்.
சாவு எண்ணிக்கைகளின் பின்னால் நாம் ஓடத் தொடங்கினால் அச்சத்திலேயே மரணித்துப்போவோம் என்ற எச்சரிக்கை சரியானதே. அச்சத்தை அகற்றும் வழி அறிவியல் அணுகுமுறைதான். “இந்தியா தன் ஊரடங்கை முடிவுக்குக் கொண்டுவரட்டும். ஊரடங்கின் விழிப்பு நோக்கம் இனி மக்களின் அன்றாடக் கலாச்சாரத்தில் தொட ரட்டும். இந்தியா ஒரு புதிய இயல்புநிலையை உருவாக் கட்டும்,” என்ற விருப்பத்துடன் கட்டுரை முடிகிறது. அனை வரின் விருப்பம் அதுதான். உலகம் முழுவதுமே அந்த இயல்புநிலை உருவாகட்டும். ஆனால் விருப்பமும் கற்பனையும் அந்த நிலையை ஏற்படுத்திவிடாது. மக்கள் மீது முழு அக்கறை கொண்ட, திசைதிருப்பாத, நடவடிக்கை கள் குறித்த நம்பிக்கையை ஊன்றுகிற அணுகுமுறை களால்தான் அது சாத்தியமாகும். அதற்கு, பேச வேண்டியதை உரக்கப் பேசியாக வேண்டும்.